'புளிப்பை
ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில்
இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச்
சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின்
உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக்
காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று
தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான
முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று
சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள்
ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி.
ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
''இரண்டு
வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை
நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம்.
மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல்
விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக்
என்று சொல்வோம்.
நம்
உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள்
தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும்.
இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில்
மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும்
உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும்
உதவுகிறது.
நன்மை
தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை
எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த
நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள்
ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக்
உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள்
கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல்
நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து,
பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’
என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத்
தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில்
கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக்
இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர்,
மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு
சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
கற்றாழையுடன்
சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.
No comments:
Post a Comment